டான்ஸ் ஆடியபோது ஹார்ட் அட்டாக்... மேடையிலேயே சுருண்டு விழுந்து பிரபல மராத்தி நடிகை அஸ்வினி மரணம்
புனே: நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த போது, மராத்திய நடிகை அஸ்வினி ஏக்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தும்காதா, பாவரே பிரேம் ஹை உள்ளிட்ட பல மராத்திய படங்களில் நடித்தவர் நடிகை அஸ்வினி ஏக்போதே(44). இவர் கணபதி பாபா மோரியா, தேபு உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
2009-ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற அஸ்வினி, பரதநாட்டிய கலைஞரும் ஆவார். அவ்வப்போது நாட்டிய நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் புனே பாரத் நாட்டிய மந்திர் அரங்கில் நடந்த 'நாட்டியதிரிவிதா' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஸ்வினி நடனமாடினார். சக கலைஞர்களுடன் மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த போது, திடீரென அஸ்வினிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மேடையிலேயே அவர் சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார்.
இதைக் கண்டு மேடையில் இருந்த மற்ற நடன கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அஸ்வினி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நடிகை ஒருவர் மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த போது, சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மராத்திய திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு புனே விமானப் பயணத்தின் போது, தனது சக பயணி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியவர் அஸ்வினி என்பது குறிப்பிடத்தக்கது.