மகாராஷ்டிராவை ஆட்டிப்படைக்கும் “வறட்சி”- உணவுக்காக விவசாயியைக் கடத்திய இரண்டு பேர்!
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சாப்பாட்டுக்காக விவசாயியைக் கடத்திய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடா பிராந்தியம், சில்லோடு தாலுகாவைச் சேர்ந்த சுதாம் சுரத்கார் என்ற விவசாயி நேற்று தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு நபர்கள் அவர் கையில் இருந்த சாப்பாட்டு பாத்திரத்தைப் பிடுங்கி அதில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளனர்.
அத்துடன் பசி அடங்காததால் விவசாயி சுதாமை பிடித்து வைத்துக்கொண்ட அந்த நபர்கள் வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு மேலும் பெரிய பாத்திரத்தில் சாப்பாடு அனுப்பி வைத்தால்தான் சுதாமை விடுவிப்பதாக கூறி மிரட்டியுள்ளனர். இருப்பினும் அவர்களின் பிடியில் இருந்து நைசாகத் தப்பிய சுதாம் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட ஊருக்குச் சென்று விசாரித்தபோது அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக புகார் கூற ஒருவரும் முன்வரவில்லை. இத்தகவலை அவுரங்காபாத் போலீஸ் அதிகாரி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.