போலீஸ்காரர்களை ஸ்டிரைக்கிற்கு தூண்டியவர் தேச துரோக வழக்கில் கைது! கர்நாடக அரசு அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் காவல் துறையில் பணியாற்றி வரும் எஸ்.ஐ அந்தஸ்துக்கு கீழுள்ள போலீஸ்காரர்கள் அனைவரும் நாளை மறுநாள் 4ம் தேதி மொத்தமாக விடுமுறை எடுத்து சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக கர்நாடக போலீஸ்காரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா தலைமையில் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நடந்தது. இதில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போலீஸ்காரர்கள் அறிவித்துள்ள போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா, அரசு அங்கீகாரம் பெறாத 'அகில கர்நாடக போலீஸ் மகா சங்கா' என்ற அமைப்புதான் போராட்டம் குறித்து அறிவித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்த போராட்டத்தில் போலீஸ்காரர்கள் பங்கேற்பதை தடுக்க வேண்டும். அதைவிடுத்து போராட்டத்தில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் எஸ்மா சட்டத்தின்கீழ் காவல்துறையை கொண்டுவந்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், அகில கர்நாடக போலீஸ் மகா சங்கா, தலைவர் ஷஷிதர் கைது செய்யப்பட்டுள்ளார். எலகங்கா போலீஸ் நிலைய சரகத்தில் வைத்து அதிகாலை 12.30 மணிக்கு சசிதர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது தேச துரோக சட்டம் பாய்ந்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சசிதரை ஜூன் 16ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.