கேரள சுகாதார திட்டத்திற்கு ரூ. 100 கோடி... உம்மன் சாண்டியிடம் வழங்கினார் மாதா அமிர்தானந்தமயி
கொல்லம்: கேரளாவில் கழிவறை கட்டவும், சுகாதார திட்டங்களுக்கும் ரூ. 100 கோடி அளிக்கும் உறுதி சான்றிதழை அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டியிடம் ஆன்மீகத் தலைவர் மாதா அமிர்தானந்தமயி வழங்கினார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே வள்ளிக்காவு என்ற இடத்தில் மாதா அமிர்தானந்தமயி 62-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. அந்த விழாவில் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி, மாதா அமிர்தானந்தமயி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, கேரள கவர்னர் பி.சதாசிவம், மேல்சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியன், மத்திய மந்திரிகள் நஜ்மா ஹெப்துல்லா, மனோஜ் சின்ஹா, ஸ்ரீபாத் எஸ்சோ நாயக், இந்தியாவுக்கான பிரான்சு நாட்டு தூதர் பிரான்கோயிஸ் ரிச்சயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கேரளாவில் கழிவறை கட்டவும், சுகாதார திட்டங்களுக்கும் ரூ.100 கோடி அளிக்கும் உறுதி சான்றிதழை அமிர்தானந்தமயி உம்மன் சாண்டியிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் அமிர்தானந்தமயி பேசுகையில், "இந்தியா ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த முகமாக உள்ளது. மற்றொருபுறம் வறுமை, கல்வியின்மை, சுகாதாரமின்மை என வேறொரு முகமாக காணப்படுகிறது. ஆரோக்கியமான, சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்கி இரு முகங்களையும் இணைத்து ஒரே அழகிய முகமாக நாம் காண வேண்டும்" என்றார்.
விழாவில், உம்மன் சாண்டி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் அமிர்தானந்தமயி சேவையை பாராட்டி பேசினர்.
சில நாட்களுக்கு முன்பு பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் கங்கை நதியை தூய்மைப்படுத்த மாதா அமிர்தானந்தமயி ரூ.100 கோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.