எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நாளை முன்வைத்து மாயாவதி அரசியல் விளையாட்டு!
ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த நாளை முன்வைத்து புதிய அரசியல் விளையாட்டை தொடங்கியுள்ளார் மாயாவதி.
லக்னோ: ராஜ்யசபா எம்.பி. பதவி ராஜினாமா செய்த நாளை முன்வைத்து மாதந்தோறும் ஜூலை 18-ல் பேரணி நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி. தேர்தலில் இழந்த தலித் வாக்கு வங்கியை மீண்டும் பெறுவதற்கான அதிரடியில் இறங்கியுள்ளார்.
தலித்துகள் தாக்கப்படுவது குறித்து பேசவிடாமல் தடுத்ததற்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்த ஜூலை 18-ந் தேதியை நினைவு கூறும் வகையில் மாதந்தோறும் 18-ந் தேதி பேரணி நடத்தப்படும் என மாயாவதி அறிவித்திருக்கிறார். இதுவரை 1995-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி தம் மீது சமாஜ்வாதி கட்சியினர் தாக்குதல் நடத்திய நாளை முன்வைத்து ஒவ்வொரு மாதமும் பேரணி நடத்தி வந்தார் மாயாவதி.
கடந்த 22 ஆண்டுகாலமாக இந்த தேதி அரசியலை உ.பி.யில் நடத்தி வந்தார் மாயாவதி. இம்முறை தலித்துகளுக்காக தாம் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நாளை ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறார் மாயாவதி.
2019 லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து மாயாவதி இந்த புதிய அரசியல் வியூகத்தை வகுத்துள்ளார். லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிற மாயாவதியின் வியூகம் கை கொடுக்குமா? என்பது விரைவில் தெரிய வரும்.