டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்த குஷ்பு தற்கொலை
டெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவி குஷ்பு என்பவர் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகனேரைச் சேர்ந்தவர் குஷ்பு சவுத்ரி(18). அவர் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். அவர் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் விடுதி அறையில் இன்று அதிகாலை 2.50 மணிக்கு அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாகத் தொங்கியதை சக மாணவி ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தார். வார்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
குஷ்புவின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குஷ்பு தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இது குறித்து குஷ்புவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை குஷ்பு தனது தோழிகளுடன் ஷாப்பிங் சென்றுவிட்டு சந்தோஷமாகத் தான் பேசியுள்ளார். முதல்கட்ட விசாரணையில் அவர் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.