உ.பியில் ஆடு, மாடு வெட்ட தடை விதித்ததன் எதிரொலி... டெல்லியில் இறைச்சி விலை வீர்ர்ர்!!
உத்தரப்பிரதேசத்தில் ஆடு, மாடுகளை வெட்ட அம்மாநில முதல்வர் தடைவிதிதுள்ளதையடுத்து டெல்லியில் இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஆடு, மாடுகளை வெட்ட அம்மாநில முதல்வர் தடைவிதிதுள்ளதையடுத்து டெல்லியில் இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்ற கையோடு யோகி ஆதித்ய நாத் அம்மாநிலத்தில் ஆடு, மாடுகளை வெட்ட தடைவிதித்தார். மேலும் அனுமதி இல்லாமல் செயல்படும் இறைச்சிக் கூடங்களையும் இழுத்து மூட உத்தரவிட்டார்.
இதனைக் கண்டித்து இறைச்சி வியாபாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் இறைச்சி விநியோகம் முடங்கியுள்ளது.
பக்கத்து மாநிலங்களில் இருந்து..
இறைச்சி வியாபாரிகள் போராட்டத்தால் அண்டை மாநிலமான டெல்லிக்கு இறைச்சி வரத்து குறைந்துள்ளது. பெரும்பாலும் டெல்லிக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்துதான் இறைச்சி கொண்டுவரப்படுகிறது.
உ.பியிலிருந்து நிறுத்தம்
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் போராட்டத்தால் டெல்லிக்கு அங்கிருந்து இறைச்சி வருவது நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் இறைச்சி போதுமான அளவு இல்லாததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கிடுகிடுவென உயர்வு
டெல்லியில் தினமும் 40 ஆயிரம் கிலோ எருமை மாட்டு இறைச்சியும், 80 ஆயிரம் கிலோ ஆட்டு இறைச்சியும் விற்பனை ஆகும். அந்த அளவுக்கு இறைச்சிவரத்து இல்லாததால் இதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ரூ.40 முதல் ரூ 60 வரை உயர்வு
ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.40-ல் இருந்து ரூ.60 வரை உயர்ந்துள்ளது. ரூ.380-ல் இருந்து ரூ.400 வரை விற்கப்பட்ட ஆட்டு இறைச்சி தற்போது ரூ.500 வரை உயர்ந்து விட்டது. எருமை மாட்டு இறைச்சி ரூ.170-ல் இருந்து ரூ.200 ஆக உயர்ந்து இருக்கிறது.
அசைவ பிரியர்கள் பாதிப்பு
இறைச்சி விலை திடீர் உயர்வால் டெல்லி அசைவ பிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் நடைபெறும் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தால் மட்டுமே டெல்லியில் இறைச்சி விலை குறையும் என தெரிகிறது.