"கலகலக்கும்" ஆம் ஆத்மி! மேதா பட்கர் கட்சியில் இருந்து ராஜினாமா!!
டெல்லி: ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும். இருவரும் கேஜ்ரிவால் சர்வாதிகாரியாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.
இதனால் ஆம் ஆத்மியில் படிப்படியாக ஓரம்கட்டப்பட்டு இன்று தேசிய செயற்குழுவில் இருந்தே நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் மேதா பட்கர் மிகக் கடுமையாக அதிருப்தி அடைந்து ஆம் ஆத்மியை விட்டே வெளியேறிவிட்டார்.
இது குறித்து மேதா பட்கர் கூறுகையில், பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தியவர் பிரசாந்த் பூஷண். நாட்டின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தியவர்களில் முதன்மையானவர்.
அடித்தட்டு மக்கள் குறிப்பாக விவசாயிகளின் பேராதாரவைப் பெற்றவர் யோகேந்திர யாதவ். அவர்களை அப்படி நீக்கியிருக்கக் கூடாது. ஆம் ஆத்மியில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதை நான் விரும்பவில்லை. அதேபோல் ஒருவரே பல பொறுப்புகளை வகிப்பதும் சரியானதும் அல்ல.
ஆகையால் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.
மேதா பட்கரைத் தொடர்ந்து மேலும் பலரும் ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது.