மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் அப்படி என்னதான் சிக்கல்?
மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா பற்றி இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாகும் செய்திகள், அவரை லண்டனில் இருந்து மீட்டுவரும் பணிகளை தொய்வுபடுத்தி சிக்கலை உண்டாக்கியுள்ளது என்று, இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஐடிபிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் இருந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. அதேசமயம், அவருக்குச் சொந்தமான கார் ரேஸ் நிறுவனம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் அணி, யுனைடெட் ப்ரூவரீஸ் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொடர்ந்து இயங்கிவருகின்றன.
ஆனால், லண்டனில் தலைமறைவாக இருந்துவரும் விஜய் மல்லையாவை கைது செய்யவும், நாடு கடத்தவும் இந்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டும் பலன் இல்லை. இந்நிலையில், அவரை நாடு கடத்துவது பற்றி பிரிட்டன் அதிகாரிகளிடம் பேசி, இந்திய அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.
இதுகுறித்த வழக்கு விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய தரப்பில் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பங்கேற்று, தங்களது வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். விஜய் மல்லையாவும், தனது வழக்கறிஞர்களுடன் இந்த விசாரணையில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், அவரை பற்றி இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக மோசடி மன்னன் என செய்தி வெளியாவதற்கு, மத்திய அரசு வட்டாரங்கள் அதிருப்தி தெரிவிக்கின்றன.
விஜய் மல்லையா பற்றி ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளை, அவர் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, லண்டன் நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்புள்ளது. இதனால், அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் தொய்வு ஏற்படும்.
எனவே இந்திய ஊடகங்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும், வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.