ராகுலை 'பப்பு' என்று குறிப்பிட்ட காங். தலைவர்... தானாக தேடிக்கொண்டாரா ஆப்பு?
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை 'பப்பு' என, அழைத்த மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
லக்னோ : ராகுல் காந்தியை வாட்ஸ் அப் குரூப்பில் பப்பு என்று குறிப்பிட்டதற்காக மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வினய் பிரதாப் ' இந்தியன் நேஷனல் காங்கிரஸ்' என்ற பெயரிலான வாட்ஸ் ஆப் குழுவில் சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில் ராகுல்காந்தியை புகழும் விதமாக "அதானி, அம்பானி, மல்லையா போன்ற தொழிலதிபர்களுடன் பப்பு சேர்ந்து இருக்க முடியும்; ஆனால், அவர் அப்படி செய்யவில்லை".
பப்புவால், ஒரு அமைச்சராகவோ, பிரதமராகவோ கூட ஆகியிருக்க முடியும். ஆனால், அவர் அந்த பாதையில் செல்லவில்லை. மான்ட்சவர் கிராமத்தில் துப்பாக்கி சூட்டில் ஐந்து விவசாயிகள் உயிர் இழந்ததற்கான நிகழ்வில் பங்கேற்கத் தானே சென்றார் என்று குறிப்பிட்டிருந்தார்.
வாட்ஸ் அப் செய்தியால் சர்ச்சை
ராகுல்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் விதமாக உயர்நோக்கத்துடன் செயல்பட்டார் என்று வினய் பிரதாப் புகழ்ந்து தள்ளியிருந்தார். ஆனாலும் பாருங்கள் விதி யாரை விட்டது. ராகுலை புகழ்ந்து பேசியதெல்லாம் மறைந்து அதில் பப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பதவி பறிபோனது
பாஜகவினர் ராகுலை பப்பு என்று விமர்சிக்கின்றனர். பப்பு என்றால் சிறுபிள்ளை, கைப்பிள்ளை என்று அர்த்தமாம். இதனால் கடுப்பான ராகுல் வினய் பிரதாப்பை கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்த நீக்கியுள்ளார்.
வினய் மறுப்பு
இது குறித்து கவலை தெரிவித்துள்ள வினய், தான் அனுப்பிய செய்தி போட்டோஷாப் செய்யப்பபட்டுள்ளதாக கூறியுள்ளார். ராகுல் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், நான் போய் அவரை பப்பு என்று சொல்வேனா.
சதி செய்து விட்டனர்
என் மீது நடவடிக்கை பாஜகவின் திட்டமிட்ட சதி. ஆனால் இது குறித்து என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று வினய் வருத்தம் தெரிவித்துள்ளார்.