சல்மான்கானை விபத்து வழக்கில் சிக்க வைத்த பக்கத்து வீட்டுக்காரரின் சாட்சியம்!
மும்பை: சல்மான்கான் வழக்கில் அவரது பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன சாட்டியமும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
மும்பை, பந்த்ரா பகுதியிலுள்ள சல்மான் கான் வீட்டுக்கு அருகே வசிக்கும் 63 வயதான, பிரான்சிஸ் பெர்ணான்டஸ் கடந்த ஆண்டு மே மாதம், கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில், எனது பூனைக்குட்டி கத்தி தொந்தரவு செய்ததால் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தேன்
பூனைக்குட்டிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது, தெருவில் பெரிய சத்தம் கேட்டது. ஓடிச் சென்று பார்த்தபோது சல்மான்கான் மற்றுமொரு நபரை சூழ்ந்தபடி பொதுமக்கள் அடிக்க பாய்ந்தனர். கற்களும் வீசப்பட்டன.
என்னை பார்த்ததும், சல்மான்கான், தன்னை காப்பாற்றும்படி கெஞ்சினார். அப்போது எனது மனைவியும் ஓடி வந்தார். இருவருமாக சேர்ந்து சல்மான்கானை காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தோம். இவ்வாறு அவர் சாட்சியம் கூறியிருந்தார். பக்கத்து வீட்டுக்காரரின் சாட்சியத்தின் மூலம், சம்பவ இடத்தில் சல்மான் இருந்தது உறுதியானது.
இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டு நான்கு பேர் காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.