தமிழிசை, கனிமொழி உள்பட 10 தலைவர்களுடன் மோடியை சந்தித்து பேசிய விஜயகாந்த்
டெல்லி: டெல்லி சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மேகதாது விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயல்கிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் கர்நாடக அரசை அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்க முடிவு செய்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதையடுத்து அவர் நேற்று ஒரே நாளில் மேகதாது விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேகதாது பிரச்சனை குறித்து திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளேன் என்றார். அதன்படி அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
விஜயகாந்துடன் தமிழிசை சவுந்திரராஜன், கனிமொழி உள்ளிட்ட 10 கட்சி தலைவர்கள் டெல்லி சென்றனர். அவர்கள் அனைவரும் மோடியை சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பின்போது மேகதாதுவில் கர்நாடக அரசை அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் மோடியை வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது, முல்லைப் பெரியாறு விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை ஆகியவை பற்றியும் அவர்கள் மோடியுடன் பேசியுள்ளனர்.