கமல் சொல்றதையெல்லாம் அங்க போய் சொல்லமுடியுமா?... ஜெயகுமார் நக்கல்
கமல் சொல்றதையெல்லாம் போய் ஜிஎஸ்டி மாநாட்டில் கூற முடியுமா என்று அமைச்சர் ஜெயகுமார் கிண்டலடித்துள்ளார்.
டெல்லி: கமல் கூறுவதையெல்லாம் ஜிஎஸ்டி மாநாட்டில் கூற முடியாது என்று டெல்லியில் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இதில் சினிமாத் துறைக்கு 28 சதவீத வரி விதிப்பை விதித்துள்ளனர். இந்த நிலையில் தென்னிந்திய வர்த்தக சபை நிர்வாகிகள், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது கமல் பேசுகையில், மத்திய அரசு விதித்திருக்கும் ஜி.எஸ்.டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும். சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது ஒரு கலை. திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும் தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
வேற்றுமையில் ஒற்றுமை
ஜி.எஸ்.டி வரியை தேசிய அளவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களுக்கு நிகராக மாநில அரசுகளுக்கு விதிக்கக்கூடாது. அதேநேரத்தில், ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜி.எஸ்டி வரிவிதிப்பதும் சரியல்ல. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது.
சினிமாவை விட்டே விலகுவேன்
எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிட்டால் நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்றார் கமல்ஹாசன்.
ஜிஎஸ்டி மாநாடு
இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் ஜிஎஸ்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் நிதி அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டனர். உணவு இடைவேளையின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் கமல் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
கமல் சொல்றதெல்லாம்...
அதற்கு மிகவும் காட்டமாக, கமல் சொல்வதையெல்லாம் மாநாட்டில் சொல்ல முடியுமா என்று நக்கல் அடித்தார் ஜெயகுமார். அதன்பின்னர் சினிமா துறை மீதான ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் வரி விதிப்பு என்பது அதிகமாகும். அதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதை அவர் சொன்னதற்காக நாங்கள் வலியுறுத்தவில்லை. நாங்களாகவே சினிமா துறையின் நலன் கருதி வலியுறுத்தியுள்ளோம் என்றார் ஜெயகுமார்.