ஜூன் 1-ந்தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு!
டெல்லி: பயணிகள் ரயில் கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரயில்வே பட்ஜெட்டில் ஏ.சி. வகுப்புகளுக்கான கட்டணத்தில் சேவை வரி உயர்த்தப்பட்டது. தற்போது இருக்கும் சேவை வரி 12.36%-ல் இருந்து 14% உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சேவை வரியை வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை ரயில்வே வாரியத்தில் இருந்து அனைத்து கோட்டங்களுக்கும் நேற்றிரவு அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் ஏ.சி. சேர்கார், ஏ.சி. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 3-ம் வகுப்புகளுக்கு கட்டணம் அதிகரிக்கிறது. 2% க்கும் குறைவாக சேவை வரி அதிகரித்து இருப்பதால் கட்டணமும் பெரிய அளவில் உயர்வு இருக்காது என்றும் கூறப்படுகிறது.
டிக்கெட் கட்டணத்துக்கு ஏற்ப 100-க்கு 1 ரூபாய் என்ற அளவில் மட்டுமே கட்டண உயர்வு இருக்கும். சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு சேவை வரி உயர்வு இல்லை என்பதால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை.
அதே நேரத்தில் புதிய கட்டணத்திற்கான மாற்றம் செய்யப்படும் வரை பயணிகளிடம் இருந்து பழைய கட்டணமே வசூலிக்கப்படும். ஜூன் 1- ந் தேதி அல்லது அதற்கு பின் பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து, மீதி தொகை வசூலிக்கப்படும்.