அன்னை தெரசாவின் 13 ஆதரவற்றோர் இல்லங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசு!
கொல்கத்தா: அன்னை தெரசா உருவாக்கிய மிஷனரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வரும் 13 ஆதரவற்றோர் இல்லங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அந்த இல்லங்களை மூடி விட மிஷனரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பு முடிவு செய்துள்ளது.
திருமணமாகாதவர்கள், விவாகரத்து செய்தவர்கள், கணவன் அல்லது மனைவியைப் பிரிந்தவர்களுக்கு குழந்தைகளைத் தத்துக் கொடுக்க இந்த அமைப்பு மறுத்ததைத் தொடர்ந்து பிரச்சினை வெடித்தது.
இதுதொடர்பாக அரசு நியமித்த விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிக்க தெரசா உருவாக்கிய அமைப்பு முன்வரவில்லை என்பதால் சர்ச்சையும் வெடித்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த அமைப்பு நடத்தி வரும் 13 ஆசதரவற்றோர் இல்லங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குழந்தைகள் தத்துக் கொடுப்பது தொடர்பாக அரசு நியமித்த வழிகாட்டுதல்களை இந்த அமைப்பு சரிவர கடைப்பிடிக்கவில்லை என்பதால் இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாம்.
ஆனால் இந்த முடிவுக்கு மத்திய அரசு தானாக வரவில்லை என்றும் மிஷனரீஸ் ஆப் சாரிட்டி அமைப்புதான் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துரை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.