பெங்களூரு சிறையில் சசிகலாவை திடீரென சந்தித்த கருணாஸ்… 40 நிமிடங்கள் மனம் உருகி பேசியது இதுதானாம்
பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலா, கருணாஸ் எம்எல்ஏவிடம் மனம் உருகி பேசியுள்ளாராம்.
பெங்களூரு: அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனைப் பெற்று சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை அமைச்சர்கள், நிர்வாகிகள், முக்கிய புள்ளிகள் மட்டுமே சசிகலாவை தொடக்கத்தில் சென்று பார்த்த வண்ணம் இருந்தனர். அதன் பிறகு அவரை யாரும் அவ்வளவாக சென்று பார்ப்பதில்லை என்று கூறப்பட்டது.
கருணாஸ் சந்திப்பு
இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை நடிகர் கருணாஸ் சந்தித்து பேசியுள்ளார். அவருடன் சசிகலா ஆதரவு நிர்வாகிகளும் சென்று சசிகலாவை பார்த்துள்ளனர்.
உருகி உருகி பேச்சு
எம்.எல்.ஏ. கருணாஸ் சசிகலாவை சந்தித்து 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது, அதிமுக கட்சியைப் பற்றி மனம் திறந்து உருகி உருகி சசிகலா பேசியதாக கருணாஸ் கூறியுள்ளார்.
கட்சி வளர்ச்சி
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வளர்த்த கட்சியை எந்த காரணத்தை கொண்டும் சிதைத்து விடக்கூடாது என்று சசிகலா கருணாஸ்சிடம் கூறியுள்ளார். சசிகலாவை சந்தித்ததும், அவருடன் பேசியதும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கருணாஸ் கூறியுள்ளார்.
சசிக்கு கடிதம்
சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு தொண்டர்கள் பலர் கடிதங்கள் அனுப்புகின்றனராம். அதற்கு நாள்தோறும் சசிகலாவும் பதில் எழுதி வருவதாகவும் சசிகலா தெரிவித்துள்ளாராம்.
பின்னணி என்ன?
அதிமுக கட்சி உடைந்து கிடக்கும் நிலையில், இணைப்புப் பற்றி ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு எதிர் மறையாக இரு தரப்பினரும் பேசி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தோப்பு வெங்கடாச்சலம் போன்றவர்கள் தனி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில், கருணாஸ் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்து பேசிவிட்டு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பற்பல சந்தேகங்களை எழுப்புகிறது.