விசாரணையே இல்லாமல் மக்களை கொல்லும் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை: பிரணாப் முகர்ஜி கவலை
நாட்டில் விசாரணை எதுவுமே இல்லாமல் மக்கள் அடித்துக் கொல்லும் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
டெல்லி: பொதுமக்களை எந்த ஒரு விசாரணையுமே இல்லாமல் அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பசுபாதுகாப்பு குண்டர்கள் எந்த ஒருவிசாரணையுமே இல்லாமல் பொதுமக்களை அடித்து கொல்லும் கொலைவெறி சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. ஜனநாயக நாட்டில் மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் இச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
பொதுமக்களை எந்த ஒருவிசாரணையுமே இல்லாமல் அடித்து கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த தேசத்தின் அடிப்படை கோட்பாடுகளை காப்பாற்ற நாம் விழிப்புடன் செயல்படுகிறோமா?
பொதுமக்களை கும்பல்கள் அடித்து கொல்லும் சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. இவற்றை நாம் உடனே நிறுத்தியாக வேண்டும்.