மேகதாது விவகாரம்... விரைவில் ஆவண செய்வதாக மோடி உறுதி ... தம்பித்துரை தகவல்
டெல்லி: மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதை தடுத்து நிறுத்துமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடியை நேற்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் இணைந்து சென்று நேரில் பார்த்து மனு கொடுத்தனர். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட பிரதமர் விரைவில் ஆவண செய்வதாக உறுதியளித்தார் என்று பின்னர் அதிமுக குழு தலைவர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிமுக எம்.பியும், லோக்சபா துணைத் தலைவருமான தம்பித்துரை தலைமையில் இந்த எம்.பிக்கள் குழு பிரதமரை நேரில் சந்தித்தது. எம்.பிக்களில் 48 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். 4 பேர் திமுக, ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (டி.கே.ரங்கராஜன்), இன்னொருவர் பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆவர்.
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்.பி. ராதாகிருஷ்ணனும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தார்.
மேலும் தமிழரும், உ.பி.யைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பியுமான அம்பேத் ராஜனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களான மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், சிபிஐ கட்சியின் டி.ராஜா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
சுமார் 25 நிமிடம் இந்தச சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போது தாங்கள் கொண்டு வந்திருந்த மனுவை பிரதமரிடம் தமிழக குழு அளித்தது. தமிழக அரசு சார்பில் ஒரு மனுவும், திமுக சார்பில் ஒரு மனுவும் பிரதமரிடம் வழங்கப்பட்டன. பின்னர் தங்களது கோரிக்கையை விளக்கி ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஒருவர் பேசினர்.
தம்பித்துரை, கனிமொழி, அன்புமணி ராமதாஸ், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் பேசினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நான்கு மாநில முதல்வர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டது.
சந்திப்புக்குப் பின்னர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி வழங்குவது இல்லை என்றும், கோர்ட் தீர்ப்பை மதித்து நடப்பது இல்லை என்றும் பிரதமரிடம் கூறினோம். இது விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு கர்நாடகம் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். நாங்கள் கூறிய விவரங்களை கேட்டு அறிந்த பிரதமர் மோடி, விரைவில் ஆவன செய்வதாக உறுதி அளித்தார் என்றார் அவர்.