ரிசர்வ் வங்கி ஆளுநராக மீண்டும் ரகுராம் ராஜன் நியமனமா? மவுனம் கலைத்த மோடி
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் ரகுராம் ராஜன் தொடருவாரா என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பதிலளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு 2 கடிதங்களையும் அனுப்பியுள்ளார்.
ஆனால் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் வால்ஸ்ட்ரீர் ஜர்னலுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார்.
அதில் ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜனை மீண்டும் தேர்வு செய்வதை நீங்கள் ஆதரிப்பீர்களா? என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில்:
இது நிர்வாகம் தொடர்பான விவகாரம். ஊடகங்களின் ஆர்வம் சார்ந்த ஒரு விஷயமாக நான் கருதவில்லை. ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் வரை உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.