'டி.ஆர்.பி' பிரதமர்.. சுய நலத்துக்காக ராணுவ வீரர்களை பலி கொடுக்கிறார்.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு
டெல்லி: நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து வியூகம் வகுப்பதற்காக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி ஆக்ரோஷமாக பேசினார். அவர் கூறிதாவது:
பிரதமர் மோடி டிவி டி.ஆர்.பி ரேட்டிங் அரசியலை நடத்துகிறார். பரபரப்பு விளம்பரமே அவருக்கு தேவை. அரசியல் கட்டமைப்பில் அனுபம்மிக்கவர்களை தாண்டி முடிவெடுக்கும் ஒரு பிரதமரை கூட காங்கிரஸ் இதுவரை நாட்டுக்கு வழங்கியதில்லை.
டி.ஆர்.பி ரேட்டிங் கிடைக்கும் என்பதற்கா திட்டங்களை அறிவிக்கும் எந்த பிரதமரையும் நாம் நாட்டுக்கு வழங்கவில்லை. ஆனால், மோடி அவ்வாறு தன்னிச்சையாக முடிவெடுப்பவராக உள்ளார். பரபரப்பாக தனது திட்டங்கள் பேசப்பட வேண்டும் என்ற தாகமே அவரிடம் உள்ளது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
தனது சுய பிம்பத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக, நாட்டு மக்களை கஷ்டப்படுத்தும் எந்த பிரதமரையும் காங்கிரஸ் வழங்கியதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்தவே பாகிஸ்தான் பார்டருக்குள் சென்று இந்திய ராணுவத்தை தாக்குதல் நடத்த வைத்ததாக அரசு கூறியிருந்தது.
பாகிஸ்தான் தாக்குதல்
ஆனால் சர்ஜிகல் ஸ்டிரைக்கிற்கு பிறகு, பாகிஸ்தான் தாக்குதல் அதிகரித்துள்ளது. 21 பெரிய தாக்குதல்களும், நுற்றுக்கும் மேற்பட்ட எல்லைதாண்டிய துப்பாக்கி சூடு சம்பவங்களும் அரங்கேறிவிட்டன.
தேச விரோத சக்திகள்
இப்போது காஷ்மீர் பற்றி எரியும் நிலையில், மோடியோ அமைதியாக உட்கார்ந்து கொண்டு உள்ளார். பாஜகவும், பி.டி.பி கட்சியும் காஷ்மீரில் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளன. பிரதமரின் அரசியல் நகர்வுகள், தேச விரோத சக்திகளுக்கு ஊக்கம் கொடுத்து வளரச் செய்துள்ளது.
ராணுவ வீரர்கள்
பிரதமரின் அரசியல் லாப முடிவுகளுக்கான விலையை, பிரதமரோ அல்லது, பாதுகாப்பு அமைச்சரோ தரவில்லை. ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தார் கொடுத்துக்கொண்டுள்ளார்கள். பாகிஸ்தானுடனான கொள்கையில், மத்திய அரசு முழு தோல்வியடைந்துள்ளது. இந்தியாவின் 85 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.