1984 கலவரத்தில் உயிரிழந்த சீக்கியர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம்: பாஜக அரசு முடிவு
டெல்லி: கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 1984 அக்டோபர் 31ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் கலவரம் மூண்டது.
இதில் 3,325 பேர் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2,733 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்று முப்பது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்திரா காந்தியின் 30வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே மத்திய அரசு மற்றும் பிற அமைப்புகள் அளித்துள்ள நிவாரணத் தொகைகளைத் தவிர தற்போது கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் கூடுதலாக ரூ.166 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.