மத்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?
டெல்லி: நாட்டின் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில், மாத சம்பளக்காரர்கள் பல்வேறு வரிச்சலுகைகளை எதிர்பார்த்துக் காத்துள்ளனர். குறிப்பாக வருமான வரி விலக்கு உச்சவரம்பானது தற்போதைய ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ3 லட்சமாக உயருமா என்பதுதான் பிரதான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் 2015-2016-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதை தாக்கல் செய்கிறார். நரேந்திர மோடி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இது.
வருமான வரி செலுத்தும் மாத சம்பளக்காரர்கள், இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இவர்கள் வருமான வரி மட்டுமின்றி, அதன் மீது கல்விக்கான கூடுதல் வரியையும் செலுத்தி வருகிறார்கள். விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், அதற்கேற்ப வரிவிலக்கு தொகை உயராததால், சம்பளதாரர்களின் வரிச்சுமை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு தனிநபர் வருமான வரி உச்ச வரம்பானது ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ2.5 லட்சத்தில் இருந்து குறைந்தது ரூ 3 லட்சமாகவாவது உயருமா என்ற கேள்வியோடு பட்ஜெட் அறிவிப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரிவு 80சி யில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ1.5 லட்சமாக உள்ளது. இந்த வரம்பும் ரூ2 லட்சமாக உயரலாம்.
சுகாதார காப்பீடு பிரீமியம் வகையில் வரி விலக்கு சலுகை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இதேபோல் பென்சன் திட்டத்தில் வரிச்சலுகைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்தது ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்ததும் ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த இரண்டிலும் தற்போது வரி விலக்கு வரம்பு உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு செய்வதை ‘குற்றம்' என்று அறிவிக்க சிறப்பு புலனாய்வு குழு சிபாரிசு செய்துள்ளது. எனவே, ரூ.50 லட்சத்துக்கு மேல், வரி ஏய்ப்பு செய்பவர் மீது, வருமான வரி சட்டப்படி வழக்கு தொடருவது இந்த பட்ஜெட்டில் கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீப காலமாக மோடி அரசின் நடவடிக்கைகள் தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளன. நிலம் கையகப்படுத்தல் சட்டம் அதன் உச்சகட்டம்.
இந்த பட்ஜெட்டிலும் முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் நேரடியாக / மறைமுகமாக தொழிலதிபர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.