காவிரி பிரச்சனையைத் தீர்ப்பது மோடியால்தான் முடியும்... ஆனால் கண்டு கொள்ளவில்லையே... சித்தராமையா
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக உள்ள காவிரி நீர்ப் பிரச்னையை தீர்ப்பது என்பது பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும்; ஆனால் மோடி இதை கண்டுகொள்ளவில்லை என்று கர்நாடக மாநில முதல்வர
மைசூரு: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே உள்ள காவிரி நீர்ப் பங்கீடு பிரச்னையை தீர்ப்பது என்பது, பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும்; ஆனால் மோடி இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவே இல்லை என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார்.
இது தொடர்பாக மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் சித்தராமையா செய்தியாளர்களுக்குப் அளித்த பேட்டி:
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நாம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்தாக வேண்டும். இது காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு ஆகும்.
தண்ணீர் திறப்பு
அதை நாம் மீறக்கூடாது. அதை மீறினால் நாம் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மீறக்கூடாது என்பதால்தான் நமக்கு கிடைத்த தண்ணீரில் இருந்து பாதியளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளோம்.
குமாரசாமி போராட்டம்
கர்நாடகத்தில் அரசியல் லாபத்துக்காக இப்போது, தண்ணீர் திறக்க குமாரசாமி போராட்டம் நடத்துகிறார். அவர் கூறியபடி கர்நாடக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் பின்னர் குடிப்பதற்கு நீர் இருக்காது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்.
அனைத்து கட்சி கூட்டம்
காவிரி நீர் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக வருகிற 5-ம் தேதி பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்படும்.
மோடியால் முடியும்
காவிரி நீர் பிரச்சினையை முடித்து வைக்க பிரதமர் நரேந்திர மோடியால்தான் முடியும். ஆனால் அவர் இந்த பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். இதுதொடர்பாக முடிவு எடுக்க கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் 17 பேர் நரேந்திர மோடிக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் அதை செய்வதில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.