அணை திறப்பு விழா... ஆர்வக் கோளாறில் ஓடிய பத்திரிகையாளர்களை சைகை செய்து உயிரைக் காப்பாற்றிய மோடி!
ஜாம்நகர்: குஜராத் மாநிலத்தில் அணை திறப்பு நிகழ்ச்சியில் படமெடுக்க ஓடிய பத்திரிகையாளர்களை சைகை செய்து தடுத்து நிறுத்தி அவர்களது உயிரை பிரதமர் மோடி காப்பாற்றியதாக அம்மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல் தெரிவித்தார்.
ஜாம்நகர் மாவட்டத்தில் சாவ்னி திட்டத்தின்கீழ் ஆஜி அணை-3 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அணையை திறக்கும் பொத்தானை பிரதமர் அழுத்தியபோது அந்த காட்சியை படம்பிடித்த ஊடகவியலாளர்கள் அனைவரும் உடனடியாக அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்தோடிவரும் காட்சியை படம் பிடிப்பதற்காக தண்ணீர் வெளியேறும் பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினர்.
இதை மேடையில் இருந்து கவனித்த பிரதமர் மோடி, அணை திறக்கப்பட்டவுடன் பாய்ந்தோடிவரும் தண்ணீரின் ஆரம்பகட்ட வேகமானது, பத்திரிகையாளர்களை மோதி சாய்த்துவிடும் என்பதை உணர்ந்தார். உடனடியாக தனது கைகளை தட்டி ஓசை எழுப்பியும், பல்வேறு வகைகளில் சைகை செய்தும் பத்திரிகையாளர்களை உடனடியாக விலகுமாறு எச்சரிக்கை செய்தார்.
பிரதமர் மோடியின் முன்னெச்சரிக்கையால் பல பத்திரிகையாளர்கள் விபரீதத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும் அப்படி உரிய நேரத்தில் சைகை செய்யாமல் இருந்திருந்தால் பலரும் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள் என்றும் குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல் தெரிவித்துள்ளார்.