குஜராத்தின் வாத்நகர் டீக்கடை சுற்றுலா அந்தஸ்து பெறுகிறது: ஏன் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன் வேலை செய்து வந்த டீக்கடையை சுற்றுலாத் தலமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் டீ விற்ற கடையை அந்தப் பகுதியின் சுற்றுலாத் தலமாக்க மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
குஜராத் மாநிலம் மேக்சானா மாவட்டம் வாத்நகர் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த ஊர். இங்குள்ள வாத்நகர் ரயில் நிலையத்தில் உள்ள சிறிய டீக்கடை ஒன்றில் தான் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் மோடி டீ விற்றுள்ளார். இந்நிலையில் இந்த டீக்கடையை நவீன முறையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாற்ற மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். இந்த இடம் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த ஊர் என்பதால் மட்டுமல்ல என்று சுற்றுலாத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
வாத்நகர் ஒரு முக்கிய சுற்றுலா மையம் என்பதோடு, புகழ்பெற் சர்மிஸ்தா ஏரியும் இங்கு அமைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மகேஷ் ஷர்மா காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்திருந்தார்.
சுற்றுலா மையமாக்க திட்டம்
2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட நரேந்திர மோடி தான் தனது தந்தையுடன் டீ விற்று கொண்டிருந்ததாக தெரிவித்திருந்தார். வாத்நகர் ரயில் நிலையத்திற்கு உள்ளே இருக்கும் சிறிய டீக்கடையில் இருந்து தான் பிரதமர் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினறார். எனவே அதனை மேம்படுத்தி சுற்றுலாத் தளமாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் உலக சுற்றுலாப் பயணிகளுக்கான வரைபடத்தில் வாத்நகரை இடம்பெறச் செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ரூ.8 கோடி செலவில் மறுசீரமைப்பு
சுமார் ரூ.100 கோடி செலவில் வாத்நகர் மேம்படுத்தப்படும் என்றும் வாத்நகர், மொதெரா மற்றும் பாட்னா உள்ளிட்ட இடங்களை சுற்றுலா மையமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முத்ற்கட்டமாக ரூ.8 கோடி செலவில் டீக்கடை அமைந்துள்ள ரயில் நிலையத்தை மேம்படுத்த மாநில சுற்றுலாத் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுப்பு
மீடியாக்களின் வெளிச்சத்திற்கு இந்தத் திட்டம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வாத்நகர் ரயில்வே நிலையத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.