காங். ஆட்சியில் ஊழல் நடந்ததை யாரும் மறுக்க முடியாது.. ஊழலை வேரோடு பிடுங்குவோம்: மோடி சபதம்
டெல்லி: முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. முந்தைய ஆட்சியை ஒப்பிடும்போது இந்த ஆட்சியில் நடந்த முன்னேற்றங்கள் தெரியும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்ச்சிளி்ல் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர். அதே போல் தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, மக்களுக்கு பதிலளிப்பது மத்திய அரசின் கடமை. நான் மிகுந்த திருப்தியுடன் நாட்டு மக்கள் முன் நிற்கிறேன். மத்திய அரசு மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. மக்கள் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைக்க தயாராகிவிட்டனர். மக்கள் மத்திய அரசின் செயல்பாடுகளை பரிசீலிப்பதால் நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ளது. முன்பை விட அரசின் மீதான நம்பிக்கை அதிரித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. முந்தைய ஆட்சியை ஒப்பிடும் போதுதான் இந்த ஆட்சியில் நடந்த முன்னேற்றங்கள் தெரியும். ஊழலின் பற்களையும் நகங்களையும் பிடிங்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்மூலம் நாட்டிற்கு பல கோடி ரூபாய் சேமிப்படைந்துள்ளது.
வளர்ந்து வந்த ஊழல் கலாசாரத்தை மத்திய அரசு கட்டுபடுத்தியுள்ளது. இது வரை நாட்டில் 1.62 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேஸ் மானியத்திலும் பல போலி பெயர்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கை்கு இணங்க 1.13 கோடிக்கும் அதிகமானோர் தங்களது கேஸ் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் சுமார் 15 ஆயிரம் கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. கல்வி துறையில் தேவையில்லாத செலவுகளாக இருந்த 36 ஆயிரம் கோடி ருபாய் சேமிக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பின் கையில் முன்னேற்றம் உள்ளது. மற்றொரு தரப்பின் கையில் அதற்கான தடைகள் உள்ளது. மக்கள் ஒப்பிட்டு பார்த்து உண்மையை கண்டறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.