நாகாலாந்து அமைதி ஒப்பந்தம்: ஜெயலலிதா, மமதா, சோனியாவுடன் மோடி தொலைபேசியில் பேச்சு
டெல்லி: நாகாலாந்தில் தனிநாடு கோரி போராடும் மூய்வா தலைமையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
அகன்ற நாகாலாந்து என்ற நாகாலிம் தனிநாடு என்பதுதான் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் நீண்டகால கோரிக்கை. ஆயுதம் ஏந்தி போராடும் இந்த அமைப்புடன் மத்திய அரசு தொடர்ந்து அமைதி ஒப்பந்தங்களை மேற்கொண்டு புதுப்பித்து வருகிறது.
டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் மீண்டும் மூய்வா தலைமையிலான அமைப்புடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தைத் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுடன் மோடி தொலைபேசியில் பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.