5 மீனவர் தூக்கு விவகாரம்... ராஜபக்சேவுடன் பேசுகிறார் பிரதமர் மோடி
டெல்லி: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை ரத்து செய்ய, இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பிரதமர் மோடி பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 5 போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை தூக்கில் போட கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்த 5 பேரை உடனே மீட்க வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர்.
தூதரக மட்ட பேச்சு
இதற்கிடையே தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க மத்திய அரசு தூதரக மட்டத்தில் பேச்சு நடத்தி வருகிறது. மேலும் கொழும்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யும் சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
விரைவில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடிப் பேச்சு நடத்துவார் என்று தெரிய வந்துள்ளது. இந்த மாத இறுதியில் 25-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நேபாள தலைநகர் காட்மண்டுவில் சார்க் நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் போது மோடி-ராஜபக்சே சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அப்போது ராஜபக்சேயிடம் தமிழக மீனவர்களை விடுவிக்க மோடி வலியுறுத்துவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் 1976 - ம் ஆண்டுக்கு பிறகு யாரும் தூக்கில் போடப்படவில்லை. தூக்கு தண்டனையை நிறைவேற்ற எந்த ஜனாதிபதியும் ஒப்புதல் கொடுக்கவில்லை. ஆனால் ராஜபக்சே மட்டும்தான் தூக்கு தண்டனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.