இலங்கைக்கு மார்ச்-ல் செல்கிறார் மோடி! 28 ஆண்டுக்குப் பின்னர் இந்திய பிரதமரின் அரசு முறை பயணம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஸ்ரீனிவத்சவா உறுதிப்படுத்தியுள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது ராஜிவ் காந்திக்குப் பின்னர் இந்திய பிரதமரான மோடி இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்கிறார்.
இலங்கையின் புதிய அதிபரான மைத்ரிபால சிறிசேன பிப்ரவரி 16-ந் தேதி இந்தியா வருகை தருகிறார். இதேபோல் பிரதமர் மோடி மார்ச் மாதம் இலங்கை செல்ல இருக்கிறார்.
கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஸ்ரீனிவத்ச்வா இத்தகவலை உறுதிப்படுத்தியதுடன், மார்ச் 14, 15-ந் தேதிகளில் மோடி அந்நாட்டுக்கு செல்லக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
1987ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் காந்திதான் இலங்கைக்கு கடைசியாக அதிகாரப்பூர்வமாக அரசு முறைப் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் ஆவார். அதன் பின்னர் சார்க் மாநாடு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள மட்டுமே இலங்கைக்கு இந்திய பிரதமராக இருந்த மன்மோகன்சிங் சென்றிருக்கிறார்.
ஆனால் கடந்த 28 ஆண்டுகாலத்தில் இந்திய பிரதமர் ஒருவர் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றதில்லை. பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது.