ராஜஸ்தானில் மூவர்ணக் கொடியை ஏற்றிய சிறப்பு விருந்தினர் யாரென்று பாருங்களேன்....
ராஜஸ்தானில் சிறப்பு விருந்தினர் கொடியேற்றுவதற்குள் அங்கிருந்த 2 குரங்குகள் மூவர்ணக் கொடியை ஏற்றின.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை அங்கு வந்த இரு குரங்குகள் ஏற்றின. இதற்கு மாணவர்கள் கைதட்டி கரகோஷம் எழுப்பினர்.
சுதந்திர தினம் நாடு முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஆங்காங்கே பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் குரங்குகள் கொடியேற்றின. அஜ்மர் மாவட்டத்தின் புஷ்கர் என்ற பழம்பெரும் நகரம் உள்ளது.
இங்குக் குரங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. பிரக்யா பால நிகேதன் என்ற பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தேசியக் கொடியேற்ற பள்ளி நிர்வாகம் ஆயத்தமானது.
சிறப்பு விருந்தினர் கொடியேற்ற வருவதற்குள் அப்போது சரியாக 8 மணிக்கு அங்கு வந்த இரு குரங்குகள் கம்பத்தின் மீது ஏறின. பின்னர் கம்பத்தில் கட்டியிருந்த கயிற்றை பிடித்து இழுத்தன.
அப்போது பூமழை தூவியது. தேசியக் கொடியும் பறந்தது. இதைக் கண்ட மாணவர் சிரிப்பலை மற்றும் கரகோஷம் எழுப்பினர். எதேச்சையாகக் கயிற்றை பிடித்து இழுத்தாலும் குரங்குகள் கொடியேற்றியதாகவே இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரப்பி வருகின்றனர்.