மனிதர்களுக்கு குரங்குகள் கற்பித்த “மனிதநேயம்” – கான்பூர் ரயில் நிலையத்தில் நெகிழ்ச்சி!
கான்பூர்: உத்தரப்பிரதேச ரயில் நிலையம் ஒன்றில், விபத்தில் சிக்கிய குரங்கு ஒன்றை, மற்றொரு குரங்கு காப்பாற்றி மனிதர்களுக்கு "மனிதம்" பற்றிய படிப்பினையை உணர்த்தியுள்ளன அந்த வாயில்லா ஜீவன்கள்.
கான்பூர் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பியில் அடிபட்டு தண்டவாளத்தின் இடையே குரங்கு ஒன்று தூக்கி வீசப்பட்டது.
மயக்கமடைந்து கிடந்த அந்த குரங்கை மீட்க, அதனுடன் சுற்றித்திரிந்த மற்றொரு குரங்கு ஒன்று நீண்ட நேரமாக போராடியது.
மீட்க முடியாமல் தவிப்பு:
தண்டவாளத்திற்கிடையே சிக்கி கிடந்த குரங்கை, பல முறை முயற்சித்தும் சக குரங்கால் மீட்க முடியவில்லை.
மயக்கம் தெளிய உதவி:
ஆனாலும், மனம்தளராமல் மயக்கமுற்று கிடந்த குரங்கை சக குரங்கு காப்பாற்றியது. மயக்கம் தெளிவதற்காக அந்த குரங்கை, சக குரங்கு தண்ணீரில் தூக்கிப் போட்டது.
கைகோர்த்து சென்ற குரங்குகள்:
பின்னர் மயக்கம் தெளிந்த குரங்கு தன்னைக் காப்பாற்றிய குரங்கோடு ஒன்றாக சென்றதைப் பார்த்து ரயில் நிலையத்தில் நின்றவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டனர்.
இதில் யார் குரங்கு?:
சாலையில் மனிதன் அடிபட்டு கிடந்தால் பார்த்துவிட்டு செல்லும் மனிதர்கள் வாழும் சூழலில் மின்சாரம் தாக்கி அடிபட்ட குரங்கை, மற்றொரு குரங்கு காப்பாற்றியது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
அன்பை தயவு செய்து கற்றுக் கொள்ளுங்கள்:
அட முட்டாள்களா எங்களிலிருந்து வந்த நீங்கள் மறந்த அன்பை எங்களைப் பார்த்தே கற்றுக் கொள்ளுங்கள் என்பதுபோல் அமைந்தது இந்த நிகழ்வு. என்ன செய்ய குரங்கிலிருந்து வந்த நாம்தான் அன்பு என்ற ஒன்றையே மறந்துபோய் விட்டோமே. அதனை இப்படித்தான் மீண்டும் உணர வேண்டும் போல!