நாடாளுமன்ற கட்டடத்திற்குள் புகுந்து அரை மணி நேரம் அலப்பறையைக் கொடுத்த குரங்கு!!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் வெளிநடப்புகளும், அமளிகளும் அனலை கிளப்பி வருகின்றன. நாடாளுமன்றத்தினுள் நுழைந்த குரங்கு ஒன்று, உடனே வெளிநடப்பு செய்யாமல் சுமார் அரை மணிநேரம் அங்கு தனது சேட்டையை அரங்கேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 10 தினங்களுக்கு மேலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் நூலக அறையினுள் நுழைந்த குரங்கு ஒன்று, அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் விழி பிதுங்கி, அங்கும் இங்கும் ஓடி கொண்டும், வயர்களை பிடித்து தொங்கிய வண்ணம் தனது குரங்கு சேட்டையை அரங்கேற்றிக் கொண்டிருந்தது.
முக்கிய அதிகாரிகள், நாடாளுமன்ற ஊறுப்பினர்கள், அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் அமரும் முக்கிய பகுதியை அங்கு பாதுகாப்புக்கு இருந்த அலுவலர்கள் விரைந்து வந்து மூடியுள்ளனர். சுமார் அரை மணிநேரம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த குரங்கு, கடைசியாக விஐபிக்கள் செல்லும், முக்கிய கதவு வழியாக வெளியேறியது.
குரங்கை விரட்ட வருமாறு, நாடாளுமன்ற பாதுகாப்பு வீரர்களை, நூலக அலுவலர் அழைத்தும் யாரும் வரவில்லை. அதேநேரம், குரங்கை விரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் லங்கூர் குரங்குகளும் இல்லாததால் குரங்கை விரட்டுவதில் சிக்கல் நிலவியுள்ளது.
நாடாளுமன்ற வளகத்தினுள் வரும் குரங்குகளை விரட்ட லங்கூர் குரங்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் லங்கூர் குரங்குகளின் பணிக்காலம் முடிவடைந்து, அதன் சேவைகள் வேண்டாம் என கூறி கடந்த ஜூன் மாதத்தில் அதன் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது .