வன்முறையின் உச்சத்திற்குப் போன பெங்களூரு.. கேபிஎன் உள்ளிட்ட 52 ஆம்னி பஸ்களை தீயிட்டு எரித்த கொடூரம்
பெங்களூரு: பெங்களூருவில் இன்று வன்முறையின் உச்சத்திற்கே போய் விட்டனர் போராட்டக்காரர்கள். கேபிஎன் நிறுவனத்திற்குச் சொந்தமான தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட 38 சொகுசு பேருந்துகள் உள்பட 52 ஆம்னி பஸ்களை தீக்கிரையாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல மைசூரு சாலையில் ஒரு டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 27 லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படாதால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் தலை தூக்கியது. தமிழர்கள் கடைகள், வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்து கொளுத்தப்பட்டன.
பெங்களூரில் வெடித்துள்ள கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர இவை போதாது என்பதால் கூடுதலாக, சிஆர்பிஎப், ஆர்பிஎப், மத்திய தொழிலக படை ஆகியவை பெங்களூருவில் நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்த களம் இறக்கப்பட்டுள்ளன. மேலும், 20 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 185 கர்நாடக அதிரடிப் படையினரும் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பெங்களூர் - மைசூர் நைஸ் சாலையில் டிசோசா லேஅவுட் பகுதியில் பிஎஸ்ஐடி கல்லூரி அருகே லாரி நிறுத்தமிடத்தில் 27 லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 27 லாரிகளும் சரக்குகளுடன் எரிந்து நாசமாகின. லாரிகள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்ததால் ஒன்றுக்கு வைக்கப்பட்ட தீ அனைத்து லாரிகளும் பரவியது.
அதேபோல அந்த இடத்தில் உள்ள கொடவுனில் நிறுத்தப்பட்டிருந்த கே.பி.என் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சொந்தமான 52 சொகுசு பேருந்துக்கள் பேருந்துகள் எரிக்கப்பட்டன. இன்று போராட்டம் நடைபெற்றதால் பேருந்துகள் அனைத்தும் பத்திரமாக கேபிஎன் பணிமனைக்குள் நிறுத்தப்பட்டிருந்தன
ஆனால் அங்கு புகுந்த போராட்டக்காரர்கள் 2 பேருந்துகளுக்குத் தீவைத்துள்ளனர். ஆனால் அது அப்படியே மளமளவென மற்ற பேருந்துகளுககும் பரவி அந்த இடமே நெருப்புக் காடாக மாறியது. பேருந்துகள் ஒன்றுக்கொன்று அருகருகே நிறுத்தப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவியது. 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்து தீவைத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.பி.என் டிப்போவில் நெருப்புக்கு தப்பிய 20 பேருந்துகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கே.பி.என் நிறுவனத்தின் ஒவ்வொரு பேருந்தும் சொகுசு பேருந்து ஆகும்.
பேருந்துகள் அனைத்தும் கேபிஎன் மற்றும் எஸ்ஆர்எஸ் போன்ற பிற தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்குச் சொந்தமானவை ஆகும். பேருந்துகள் எரிக்கப்பட்டதை கே.பி.என் நிறுவன உரிமையாளர் உறுதி செய்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழக பதிவெண் கொண்ட 52 பேருந்துகளும், 27 சரக்கு லாரிகளும் எரிக்கப்பட்டுள்ளதால் பெங்களூருவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் சட்டம் ஒழுங்கு போலீசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் பதற்றமும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.