மியான்மர் எல்லையான மணிப்பூரின் மோரேவில் ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் போராட்டம்
மணிப்பூர் மாநிலத்தின் மோரே நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு வாழும் தமிழர்களும் போராட்டம் நடத்தினர்.
மோரே: ஜல்லிக்கட்டு தமிழரின் பண்பாடு; அதற்கான தடையை உடைப்போம் என தமிழக இளைஞர்கள் புரட்சியில் குதித்தனர். இப்புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் வாழும் நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையான மோரேவிலும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியுள்ளனர்.
அலங்காநல்லூரில் மையம் கொண்ட ஜல்லிக்கட்டு புரட்சி சென்னை மெரினா, நெல்லை, மதுரை, கோவை என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்த போதும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை இருக்கிறது. இதனால் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் மத்திய அரசு மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியான மோரே நகரில் வாழும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.