மகளின் செல்போனை பறிமுதல் செய்த பள்ளி நிர்வாகியை அடித்து உதைத்த தாய்
ஜலந்தர்: பஞ்சாப் மாநிலத்தில் மாணவியின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து அவரின் தாய் பள்ளி நிர்வாக இயக்குனரை தாக்கியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் உள்ளது செயின்ட் சோல்ஜர் பள்ளி. அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் செல்போன் வைத்திருந்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் செல்போனை பறிமுதல் செய்தனர். அந்த போன் மூலம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் மாணவியின் தாய் பள்ளிக்கு வந்தார். அவர் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு பள்ளி நிர்வாக இயக்குனரின் அறைக்கு சென்றார். அங்கு அவர் தனது மகள் தவறு செய்தபோதிலும் பள்ளி நிர்வாக இயக்குனர் பெண்ணை அடித்து, தலைமுடியைப் பிடித்து அட்டகாசம் செய்தார்.
அந்த பெண்ணும் மாணவியின் தாயின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் ஓடிப் போய் பிடித்து அவரது தலை முடியை பிடித்து இழுத்தார். மகள் செய்த தவறை கண்டிக்காமல் பள்ளி நிர்வாக இயக்குனரை கண்மூடித்தனமாக அவர் தாக்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.