ராஜஸ்தானில் பச்சிளம் குழந்தையை குறிவைத்த சிறுத்தை... போராடி மீட்ட வீரத்தாய்
உதய்பூர்: புலியை முறத்தால் அடித்த வீரப்பெண்மணிகள் வாழ்ந்த மண் இது. இந்த சம்பவம் போல தற்போதும் பால்குடித்துக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை குறிவைத்த சிறுத்தையை விரட்டி அடித்து குழந்தையை காப்பாற்றியுள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த வீரத்தாய் ஒருவர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தகல்பலா கிராமம். அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தை சேர்ந்த சதன் (25) பென், இவர் 2 மாதங்களே ஆன தனது பெண் குழந்தை பாயலுக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. சதனிடம் இருந்த குழந்தையை குறிவைத்து சிறுத்தை தாக்குதல் நடத்தியது. குழந்தையை கவ்வி இழுத்து செல்ல சிறுத்தை முயன்றது. அதிர்ச்சியடைந்த சதன், சற்றும் மனம் தளராமல் சிறுத்தையுடன் போராடினார். சதனுடன் சேர்ந்து அவரது வீட்டு வளர்ப்புநாயும் சேர்ந்து கொண்டது. மண் வெட்டி மற்றும் இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு 30 நிமிடம் போராடினார் சதன். அப்போது, சதனின் சத்தம் கேட்டு உறவினர்கள் வீட்டிற்குள் ஓடி வந்தனர்.
ஆட்கள் அதிகம் கூடியதும் குழந்தையை விட்டு விட்டு சிறுத்தை காட்டுக்குள் ஓடிவிட்டது. சிறுத்தையுடன் நடந்த போராட்டத்தில் சதனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சதனின் உறவினர்கள் அவரை உடனடியாக உதய்பூர் மகாராணா போபால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 15 தையல்கள் போடப்பட்டது.
வெறி அடங்காத சிறுத்தை 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் அதே வீட்டிற்கு வந்தது. பொதுமக்கள் ஆயுதங்களால் சிறுத்தையை விரட்டினர். உள்ளூர் வேட்டைக்காரர் சத்னம் சிங் உதவியுடன் அந்த சிறுத்தை 4 மணி நேர தேடுதலுக்கு பிறகு பிடிபட்டது. உடனடியாக அது உதய்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தை ஒப்படைக்கபட்டது.
இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை மீட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சதன், "நான் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தேன். அப்போது சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. அது குழந்தையை குறிவைத்து தாக்க முயன்றது. நான் குழந்தையை காப்பாற்ற குழந்தையை தரையில் வீசிவிட்டு சிறுத்தையுடன் போராடினேன். அதனால் எனது காலில் காயம் ஏற்பட்டது" என்றார். சிறுத்தையுடன் போராடி குழந்தையை மீட்ட வீரப்பெண்மணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.