இந்த 3 பேரும் எனக்குத் தேவையில்லை.. அதிர வைத்த டோணி... டிரெய்லர் சொல்லும் புதுக் கதை!
டெல்லி: டோணியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் MS Dhoni: The Untold Story பாலிவுட் படத்தின் டிரெய்லர் புயலைக் கிளப்பி வருகிறது. அதில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம்தான் இந்த பரபரப்புக்குக் காரணம்.
டோணி அதில், 3 முக்கியமான சீனியர் வீரர்களை அணியில் சேர்க்கக் கூடாது என்று தேர்வாளர்களிடம் சொல்வது போல ஒரு காட்சி வருகிறது. இதுதான் அந்த பரபரப்புக்கு முக்கியக் காரணம்.
நிஜத்திலும் கூட சில சீனியர் வீரர்களுக்கு எதிராக டோணி செயல்பட்டதாக ஒரு சலசலப்பு சில மாதங்களுக்கு முன்பு நிலவியது என்பது நினைவிருக்கலாம்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத் டோணி வேடத்தில் நடித்துள்ள படம்தான் MS Dhoni: The Untold Story. இப்படத்தின் டிரெய்லர் 11ம் தேதி வெளியானது.
ரசிகர்களிடம் வரவேற்பு
இந்த டிரெய்லருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் வரும் ஒரு காட்சி சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமைதியானவர் - அடக்கமானவர்
டோணி என்றாலே அமைதியானவர், அடக்கமானவர், எளிமையானவர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். எவ்வளவு பதட்டத்திலும் கூட அவர் அமைதியாகத்தான் இருப்பார். ஆனால் இப்படத்தின் டிரெய்லரில் ஒருவர் பிடிவாதம் பிடிக்கும் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.
இவங்க எனக்கு வேணாம்
ஒரு காட்சியில் அணித் தேர்வு நடக்கிறது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக தேர்வாளர்கள் டோணியிடம் பேசிக் கொண்டுள்ளனர். அப்போது 3 சீனியர் வீரர்களைக குறிப்பிட்டு இவர்களை சேர்க்க வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறுகிறார் டோணி.
என்னப்பா சொல்றே
அப்போது ஒரு தேர்வாளர், இவரை அதிக அளவில் வளர்த்து விட்டவர்களையே இவர் நீக்கப் பார்க்கிறார். இவர் யாரையும் விட மாட்டார் போலத் தெரிகிறது என்கிறார். அதற்கு டோணி, நாம் அனைவரும் தேசத்திற்கான வேலைக்காரர்கள். தேசத்திற்கான கடமையில் ஈடுபட்டுள்ளோம். இவர்கள் எனது அணிக்குப் பொருத்தமானவர்கள் அல்ல. எனவே இவர்கள் வேண்டாம் என்று பதிலளிக்கிறார்.
நிஜமா.. இட்டுக் கட்டப்பட்டதா?
டோணி இப்படி நிஜத்திலும் கூறியுள்ளாரா அல்லது படத்திற்காக சேர்க்கப்பட்ட மசாலாவா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் படம் பட்டாசாக பொறிந்து தள்ளும் என்பது மட்டும் உண்மை.