ஜம்மு காஷ்மீ்ர் முதல்வரானார் முப்தி... துணை முதல்வர் பாஜகவின் நிர்மல் .. மோடி முன்னிலையில்!
ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் புதிய முதல்வராக மக்கள் ஜனநாயக கட்சியின் முப்து முகம்மது சையதும், துணை முதல்வராக பாஜகவின் நிர்மல்சிங்கும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில ஆட்சியில் பாஜக பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் அங்குள்ள 70 தொகுதிகளில் ஆளும் கட்சியாகஇருந்த தேசியமாநாட்டு கட்சி 15 தொகுதிகளைப் பெற்று தோல்வி அடைந்தது. மக்கள் ஜனநாயக கட்சி 28 தொகுதிகளையும், பாஜக 25 தொகுதிகளையும், காங்கிரஸ் 12 தொகுதிகளையும் பெற்றது. தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு பாஜக - பிடிபி கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில், காஷ்மீரின் முக்கியப் பிரச்சினையான சட்டப்பிரிவு 370 சட்ட நடவடிக்கை, கூடுதல் அந்தஸ்து, காஷ்மீர் பண்டிட் விவகாரம் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் இருகட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
பிரதமர் மோடியை முப்தி முகம்மது சையது சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சில், பொது அம்சம் கொண்ட திட்டம் வகுத்து அதன்படி செயல்படுவது என்று முடிவு செய்யப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, காஷ்மீர் முதல்வராக முப்தி முகம்மது சையது இன்று பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த நிர்மல்சிங் பதவியேற்றார். பின்னர் பி.டி.பி., தரப்பில் 13 அமைச்சர்களும், பாஜக தரப்பில் 12 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
கவர்னர் வோரா, பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். பா.ஜ.,வின் மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம், காஷ்மீர் மாநிலத்தின் அதிகாரத்தில் பாஜக கால் ஊன்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.