பீகார் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்துப் போட்டி: முலாயம்சிங் அதிரடி அறிவிப்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அதன் தலைவர் முலாயம்சிங் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்கு எதிராக 'ஜனதா' என்ற பெயரில் இயங்கும் கட்சிகள் ஓரணியில் திரண்டன.
இதில் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்டவை கை கோர்த்தன. பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களை ஓரணியில் நின்று எதிர்கொள்ளவும் இந்த ஜனதா சங்கமம் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் திடீரென பீகார் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் முலாயம்சிங் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை சமாஜ்வாடி கட்சியை அவமதித்துவிட்டன; அம்மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்தன. இது எங்களுக்கு ஏமாற்றம்; ஆகையால் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றார்.
பீகாரைப் பொறுத்தவரையில் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் செல்வாக்கானவை. கடந்த சட்டசபை தேர்தலில் பீகாரில் சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் 5 தொகுதிகளை ஏற்க முடியாது எனக் கூறி சமாஜ்வாடி கட்சி தனித்துப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.