ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல்? முலாயம் சிங் மீது பரபரப்பு புகார்- ஆடியோவும் ரிலீஸ்!!
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான ஆடியோ உரையாடல் பதிவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச சிவில் பாதுகாப்பு பொது ஆய்வாளராக இருப்பவர் அமிதாப் தாகூர். இவர்தான் தற்போது முலாயம்சிங் யாதவ் மீது புகாரை கிளப்பியுள்ளார்.
இது தொடர்பாக அமிதாப் கூறுகையில், எனது செல்போனுக்கு லேண்ட் லைன் தொலைபேசி மூலம் ஒரு அழைப்பு வந்தது. இதில் பேசிய ஒரு நபர் முலாயம் சிங் யாதவ் உங்களுடன் பேச விரும்புவதாக கூறி போனை அவரிடம் கொடுத்தார். அப்போது முலாயம்சிங் என்னை மிரட்டினார் என்றார்.
2 நிமிடங்கள் 10 நொடிகள் நேரம் கொண்ட இந்த உரையாடல் பதிவும் செய்யப்பட்டுள்ளது. முலாயம் சிங் என்று கூறப்படுபவர் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டுவது அதில் அடங்கியுள்ளது. பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஜசர்னாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் தாகூர் தாக்கப்பட்ட போது முலாயம் சிங் யாதவால் காப்பாற்றப்பட்டார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் முலாயம் சிங் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் சமாஜ்வாடி கட்சி இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.