முல்லை பெரியாறில் புதிய அணை: கேரளா அரசின் கோரிக்கை நிராகரிப்பு!
டெல்லி: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக அனுமதி கோரிய கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு விண்ணப்பத்திருந்தது. இந்த மனுவை பரிசீலனை செய்த சுற்றுச்சூழல் அமைச்சகம், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது எனக் கூறி அக்கோரிக்கையை நிராகரித்துள்ளது.
மேலும், முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளதாக அறிக்கைகள் கூறும்போது புதிய அணை ஏன் கட்டவேண்டும்? என்றும் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
இதனிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கோரியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி நீதிமன்ற பதிவாளருக்கு தமிழக அரசு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.