முல்லைப் பெரியாறு அணை: பிரதமரை சந்திக்கிறது கேரளா! சர்வதேச நிபுணர் குழு வேண்டுமாம்!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க கேரளா அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவு செய்துள்ளது. மேலும் அணையின் பாதுகாப்பு குறித்து ஆராய சர்வதேச நிபுணர் குழுவை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது கேரளா.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமானது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 142 அடி தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவோ 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தினால் அணைக்குப் பாதுகாப்பு இல்லை என்று வாதிட்டு வந்தது பொய் என்று நிரூபனமாகிவிட்டது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்தியதை தொடர்ந்தும் கேரளா எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக கேரளா அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று கூட்டியது.
இக்கூட்டத்தில் கேரளா எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் முடிவில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிடுவது, பிரதமரைச் சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாநில முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் ஆகியோர் அடங்கிய குழு, பிரதமரைச் சந்திக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் உறுதித் தன்மை குறித்து, சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தவும் கேரளா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.