26/11 தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹபீஸ் சயித்... வாக்குமூலத்தில் ஹெட்லி தகவல்
மும்பை: மும்பைத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயித் மூளையாகச் செயல்பட்டதாக தனது வாக்குமூலத்தில் டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். 309 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய டேவிட் ஹெட்லி, பின்னர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், ஒரு வழக்குத் தொடர்பாக டேவிட் ஹெட்லியை அமெரிக்கப் போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், மும்பை போலீசாரின் மனுவைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்தபடி வீடியோ கான்பரன்சில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார் ஹெட்லி. அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் அங்கிருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார் ஹெட்லி.
அதில், தாக்குதலுக்கு முன்னர் 7 முறை உளவு பார்ப்பதற்காக இந்தியா வந்துள்ளதாக ஹெட்லி தெரிவித்துள்ளார். இதற்காக பல்வேறு பெயர்களில் போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீப் சயீத் முக்கியக் காரணியாகச் செயல்பட்டதாக ஹெட்லி கூறி வருகிறார். ஹபீப் சயீத்தின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டே தான் தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ள ஹெட்லி, இந்திய ராணுவத்தினருடன் மோதி காஷ்மீரை மீட்க வேண்டும் என்பதே ஹபீப்பின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தீவிரவாதி ஹபீப் சயீத் மீது இந்தியா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில், அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஹெட்லியின் வாக்குமூலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு இந்த மும்பை தாக்குதலின்போது, பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பை (ஐஎஸ்ஐ) சேர்ந்த மேஜர் அலி தனக்கு உதவியதாகக் கூறியுள்ளார் ஹெட்லி. ஒருமுறை ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாட்டவர் என தன்னை அலி கைது செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து அலியின் அறிமுகம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மேஜர் இக்பால் மற்றும் சாஜித் மிர் ஆகியோர் ஹெட்லிக்கு அறிமுகமாகியுள்ளனர்.
சாஜித் மிர் தனக்கு சல்சலோ என்ற இமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்வார் என ஹெட்லி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.