முஸ்லீம் என்பதால் எம்.பி.ஏ. பட்டதாரிக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது வழக்கு
மும்பை: முஸ்லீம் என்பதால் எம்.பி.ஏ. பட்டதாரிக்கு வேலை அளிக்க மறுத்த மும்பை நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நகை ஏற்றுமதி நிறுவனம் ஜெஷான் அலி கான் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி முஸ்லீம் என்பதால் அவருக்கு வேலை அளிக்க மறுத்தது. இந்நிலையில் இது குறித்து ஜெஷான் அலி கான் கூறுகையில்,
மதத்தின் அடிப்படையில் எனக்கு வேலை அளிக்க மறுத்த நிறுவனம் மீது வி.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் நிறுவனத்தின் மீது தானே தவிர தனிநபர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. போலீசார் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்றார்.
ஜெஷான் ஒரு முஸ்லீம் என்பதால் வேலை மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அந்த நிறுவனத்திடம் சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.
இது குறித்து சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் தலைவர் நசீம் அகமது கூறுகையில்,
வேலை மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து எங்களுக்கு மனு வந்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்போம். விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.