கனமழை.. சாலைகளில் வெள்ளம்... மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலை மூடல்
மும்பை: கொங்கன் கடற்கரை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை-கோவா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்கின்றன.
மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கடற்கரை எல்லைகளை கொண்டது கொங்கான் பகுதி. கொங்கான் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் மும்பை-கோவா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நிற்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று இரவு 8.30 மணி முதல் போக்குவரத்து கோல்கபூர் வழியாக மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஜக்புடி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் சிப்லன் பகுதியில் இருந்து கோல்காபூர் நோக்கி போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.