கான்பூர்: 30 ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் முஸ்லிம் குடும்பம்!
கான்பூர்: உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் முஸ்லிம் குடும்பம் ஒன்று சுமார் 30 ஆண்டுகளாக தங்களது வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருவது வியக்க வைப்பதாக உள்ளது.
[கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்- படங்கள்]
உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் வசித்து வருபவர் டாக்டர். அகமது. இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினார். இந்த ஆண்டுடன் சேர்த்து அவர் 30 வருடங்களாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறாராம். கிருஷ்ணர் பிறந்த தினத்தையொட்டி அவரது வீட்டில் கிருஷ்ணர் படங்கள் அலங்காரம் செய்யப்பட்டு அவரது வீடு முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து அகமது கூறியதாவது: நாங்கள் இந்த ஆண்டுடன் சேர்த்து 30 ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். எங்களுடைய மகிழ்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் மட்டும் நாங்கள் கிருஷ்ணரை வழிபடவில்லை. மக்களிடையே அன்பு, அமைதி மற்றும் சகோரத்துவம் ஆகிவற்றை ஏற்படுத்தவும் கிருஷ்ணரை வழிபடுகிறோம். நான் மற்றும் எனது குடும்பம் கிருஷ்ணர் மீது அதீத நம்பிக்கையை வைத்துள்ளோம் என்று கூறினார்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அகமதுவின் இந்த செயலை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர். மேலும், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அகமது தனது வீட்டில் கிருஷ்ணர் புகைப்படத்துடன் அலங்காரம் செய்துள்ளதை காண அப்பகுதியில் உள்ள மக்கள் பலர் அகமதுவின் வீட்டிற்கு வந்து செல்கின்றனராம்.