பலாத்காரத்திற்கு ஆளான மனைவி - எஸ்.எம்.எஸ் மூலம் ”தலாக்” அனுப்பி விவாகரத்து செய்த கணவன்!
லக்னோ: உத்திர பிரதேசத்தில் பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்துவரும் கணவரிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மனைவியை தெரிவித்ததும், அவளது கணவர் எஸ்.எம்.எஸ் மூலமாகவே அவளை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தனது பக்கத்து வீட்டில் வசித்துவந்தவர்கள் சிலரால் சமீபத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார்.
இந்நிலையில், இப்பகுதி போலீசாரிடம் அந்தப் பெண் தனது மாமியாருடன் சென்று இதுதொடர்பாக புகாரளித்தார். இந்த சம்பவத்தை துபாய் நாட்டில் கட்டிடம் கட்டும் பணியில் உள்ள தனது கணவனிடம் எஸ்.எம்.எஸ். மூலமாக தெரிவித்தார்.
எஸ்.எம்.எஸ் மூலம் விவாகரத்து:
இந்த விஷயத்தைக் கேட்ட அடுத்த வினாடியே இஸ்லாமிய மதத்தின் ஷரியா சட்டப்படி "தலாக், தலாக், தலாக்" என்ற வார்த்தைகளை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி அவரது கணவர் விவாகரத்து செய்துவிட்டார்.
4 வயது மகன்:
இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். குழந்தையையும் பார்க்க விடாமல் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார்.
துரத்தி விட்ட மாமியார்:
பலாத்காரம் செய்தவர்களைப் பற்றி போலீசில் புகார்கொடுக்க உடன் வந்த மாமியாரும் தனது மகனின் செயல்தான் சரி என்ற நோக்கில் மருமகளை வீட்டைவிட்டு துரத்தியடித்தார். ஒரே நிமிடத்தில், கணவன், குழந்தை, வீடு என அனைத்தையும் இழந்துபோனார் அந்த 25 வயதுப் பெண்.
வாழவே பிடிக்கவில்லை:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் தனது பெற்றோருடன் தற்போது தங்கியுள்ள அந்தப் பெண், வாழ்வதற்கான ஆசையையே இழந்துவிட்டதாக ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.