மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய அனுமதி கோரி முஸ்லீம் பெண்கள் போராட்டம்
மும்பை: சனி பகவான் கோவிலை அடுத்து மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்குள் சென்று வழிபட வேண்டி பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் உள்ள சனி பகவான் கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் அந்த கோவிலுக்குள் நுழைய 500 பெண்கள் முயன்றனர். ஆனால் அவர்கள் கோவில் வளாகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மும்பையில் கடலுக்குள் இருக்கும் ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய அனுமதி கோரி முஸ்லீம் பெண்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். தர்கா வாசலில் கூடிய பெண்கள் ஆணாதிக்கத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜீனத் அலி கூறுகையில்,
நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா, மகள் பாத்திமா தங்களின் தந்தையுடன் அனைத்து இடங்களுக்கும் சென்றனர். அதே போன்று தான் எங்களுக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்ல இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது.
இஸ்லாம் ஆண்களையும், பெண்களையும் சரிசமமாகவே பார்க்கிறது என்றார்.
தர்காவுக்குள் நுழைய பெண்கள் அனுமதி கோருவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று மத குரு உமர் அகமது இலியாசி தெரிவித்துள்ளார். பெண்கள் வீட்டில் தொழுகலாம். ஆனால் சமாதி மற்றும் தர்காவுக்கு வர அவர்களுக்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை என்றார்.