படுக்கையறை, கழிவறைகளில் அடக்கம் செய்யப்படும் 'முலாயம் தொகுதி' சடலங்கள்
லக்னோ: இடுகாடு இல்லாத காரணத்தால் இறந்தவர்களை வீட்டின் படுக்கையறை மற்றும் கழிவறை போன்ற இடங்களிலேயே அடக்கம் செய்து விடுகிறார்களாம் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில்.
உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் தொகுதியான எடாவாவில் சாகர்நகர் கிராமத்தில் தான் இந்த அவலநிலை. இங்குள்ள ஏழை மக்களுக்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய இடமுமில்லை, இடுகாடும் இல்லையாம்.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இடுகாடு கொடுக்கப்படாததால் இங்குள்ள மக்கள் இறந்தவர்களின் சடலத்தை தங்கள் வீட்டிலேயே, அதாவது, படுக்கையறை, கழிவறை என புதைக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்களாம். சிலர் சடலங்களை சாலையில் கூட புதைக்கிறார்களாம்.
ஆரம்பகாலத்தில் இப்பகுதியில் 6 வீடுகள் மட்டுமே இருந்துள்ளன. அப்போது அவ்வூரின் மொத்த ஜனத்தொகையே 250 பேர்கள் தானாம். ஆனால் இப்போது அங்கு திறந்த வெளிகளே இல்லை என்ற அளவிற்கு குடியிருப்புகள் அதிகரித்து விட்டன.
மாநிலம் முழுதும் உள்ள சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்ப கோடிக்கணக்கில் செலவிடும் சமாஜ்வாடி கட்சி முலாயம் தொகுதியில் வீட்டிலேயே முஸ்லிம் மக்கள் இறந்தவர்களை புதைப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறது என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.