முத்துகிருஷ்ணன் உடல் இரவு சென்னை வருகிறது.. சென்னை டூ சேலம், தமிழக அரசு வாகன ஏற்பாடு
டெல்லி ஜெஎன்யுவில் உயிரிழந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று இரவு சென்னை கொண்டு வரப்படுகிறது.
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உயிரிழந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று இரவு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. சென்னையில் இருந்து முத்துக்கிருஷ்ணனின் சொந்த ஊரான பெரியேரிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பு படித்து வந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன். சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த திங்கட்கிழமை இரவு தனது நண்பரின் அறையில் தூக்கியில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
முத்துக்கிருஷ்ணனின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
இன்று பிரேத பரிசோதனை
முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் 5 பேர் மற்றும் முத்துக்கிருஷ்ணனின் தந்தை தரப்பு மருத்துவரும் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர்.
உடலில் காயங்கள் இல்லை-தற்கொலையே
அப்போது முத்துக்கிருஷ்ணன் மரணம் தற்கொலையே என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.முத்துக்கிருஷ்ணன் உடலில் எந்தவித காயங்களும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறினர். எந்த சூழலில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் பிரேத பரசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
இதைத்தொடர்ந்து முத்துக்கிருஷ்ணனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் முத்துக்கிருஷ்ணனின் உடல் விமானம் மூலம் இன்று இரவு சென்னை கொண்டு வரப்படுகிறது.
தமிழக அரசு ஏற்பாடு
பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து முத்துக்கிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்துக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துவருவதாக கூறப்படுகிறது.